சில்லிபாயிண்ட்...
* இறுதியில் ராதிகா அதிர்ச்சி தோல்வி
சிட்னி: என்எஸ்டபிள்யு ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வந்தன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன், கனடா வீராங்கனை இமான் ஷாஹீன் மோதினர். துவக்கத்தில் சிறப்பாக ஆடிய இமான் முதல் இரு செட்களை 11-9, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.
அதன் பின் சுதாரித்து ஆடிய ராதிகா, அடுத்த 2 செட்களை, 11-4, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சி தந்தார். இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 12-10 என்ற புள்ளிக் கணக்கில் இமான் கைப்பற்றியதால் 3-2 என்ற செட் கணக்கில் வென்று அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
* செஸ் உலக கோப்பை வெளியேறினார் குகேஷ்
பாஞ்சிம்: செஸ் உலக கோப்பை போட்டியின் 3வது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், ஜெர்மன் வீரர் பிரெட்ரிக் ஸ்வான் உடன் மோதினார். போட்டியின் இடையில் சில தவறுகளை குகேஷ் செய்தபோது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரெட்ரிக் சாதுரியமாக ஆடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். இதையடுத்து, செஸ் உலக கோப்பை போட்டியில் இருந்து குகேஷ் வெளியேறினார். அதேசமயம், தமிழகத்தை சேர்ந்த மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் சிறப்பாக ஆடி கடைசி 32 வீரர்கள் சுற்றுக்கு முன்னேறினர்.
* தமிழகத்தின் இளவேனிலுக்கு வெண்கலம்
கெய்ரோ: ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்து வருகின்றன. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் தென் கொரியாவை சேர்ந்த, 2024 பாரிஸ் விளையாட்டுகள் சாம்பியன் பான் ஹியோஜின் தங்கம் வென்றார். 50 மீட்டர் ஃப்ரி பிஸ்டல் ஆடவர் பிரிவில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீரர் ரவீந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.