ஆசிரியர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: ஆசிரியர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு சிலையை செதுக்க சிற்பி தேவை. அதுபோல ஒரு குழந்தையை சிறுவயதில் இருந்தே உருவாக்கி அன்புள்ள, அறிவுள்ள, சமூக அக்கறை உள்ள மனிதர்களாய் மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களுள் நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்து, கல்வியில் புரட்சி செய்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளான இன்று செப்.5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஆசிரியர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள். அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து அவர்களின் உயர்வுக்காகப் பாடுபடும் நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.