பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் புதுக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள், தென்காசி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் செலவில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம், சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 6 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 பாரா-விளையாட்டு மைதானங்கள், கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டு மாணவர்களுக்கான முதன்மை நிலை மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கூட்டுறவுத் துறை சார்பில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து நாமக்கல் மாவட்டத்தை செயல் எல்லையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை தொடங்கி வைத்தார்.
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் சம்பளக் கணக்கு பராமரிக்கும் வங்கிகளின் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரணமடைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை, திருமண உதவித் தொகை மற்றும் உயர்கல்வித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோகி ஹோல்டிங்-ன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற் பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.