உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி: தலைவர்கள் கடும் கண்டனம்
சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நோக்கி காலணி வீசிய சம்பவத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அவர்மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வாதபிரதிவாதங்கள், சட்டரீதியான வழிமுறைகள் மற்றும் அமைதியான முறைகளால் எடுத்துரைப்பது தான் நாகரிகமான நடைமுறை.
நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை குறிவைத்து இப்படிப்பட்ட அநாகரீக செயல் நடப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்தையும், மாண்பையும் கேள்விக்குறியாக்குகிறது; சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது; சமூக ஒற்றுமைக்கும் பொது அமைதிக்கும் விரோதமானதாகும். வேறுபட்ட கருத்துகளுக்குப் பதில் வன்முறை வழியைத் தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒப்புக்கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதித்துறையின் கண்ணியத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கும் அனைவரும் இப்படிப்பட்ட செயல்களை கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர் காலணி வீசிய சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளியாகும். இது அவமானகரமானதும் கண்டனத்திற்குரியதுமான வன்செயலாகும். சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவரால் இத்தகைய செயல் நிகழ்த்தப்பட்டிருப்பது மேலும் வருத்தத்திற்குரியது. வழக்கறிஞர் எனும் பதவி பொறுப்புணர்வும், மரியாதையும், தன்னடக்கமும் நிறைந்தது. அந்தப் பொறுப்பை மறந்து இவ்வாறு நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது.
நீதித்துறை மீது நம்பிக்கையைச் சிதைக்கும் எந்தவிதமான செயலையும் கடுமையாக எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. சட்டப்பணியில் ஈடுபடுவோர் தங்கள் கருத்து வேறுபாடுகளை சட்டப்பூர்வமான, ஜனநாயகமான வழிகளில் வெளிப்படுத்துவது தான் தகுந்த நடைமுறையாகும். இச்சம்பவத்தை மிகவும் தீவிரமாகக் கண்டிக்கிறேன். இந்தச் செயலைச் செய்தவருக்குச் சட்டப்படி தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும். நீதித்துறை மரியாதை காத்தல் என்பது ஒவ்வொருவரின் கடமையாகும்; அதனைப் பாதிக்கும் எந்தச் செயலும் எத்தகைய காரணம் காட்டப்பட்டாலும் ஏற்க முடியாது.