பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் ஆய்வு!
டெல்லி: பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். பீகாரில் 2 நாட்கள் நடக்கும் ஆய்வில் அரசியல் கட்சிகள், போலீஸ், நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் மாதம் 22ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.
தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களுடன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஐ.ஆர்.எஸ்., ஐ.சி.ஏ.எஸ். என மொத்தம் 425 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் அனைத்து தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும், நேரடி கள உள்ளீடுகளை அவர்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் குறைகளைத் தீர்க்க முழுமையாக அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், பார்வையாளர்கள் வாக்குச் சாவடிகளை பார்வையிட வேண்டும் எனவும், வாக்காளர்களின் வசதிக்காக ஆணையத்தின் சமீபத்திய உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என்வும் குறிப்பிட்டுள்ளார்.