தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை : தமிழ்நாட்டில் பாசிச பா.ஜ.க.வினர் பிரிவினையின் பெயரால் கால் ஊன்றிட விடாமல் தடுக்கவும், தமிழ்நாட்டு உரிமைகளை நிலைநாட்டவும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கத்தின் வழி ஒன்றிணைந்திருக்கும் மக்கள் தமிழ்நாடெங்கும் பூத் வாரியாக உறுதி மொழியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பின்வருமாறு,
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000 பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சேர்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என உறுதியேற்போம்!
நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR)-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், “பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் – தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.