பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகம் தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு: ராஜஸ்தானுக்கு வழியனுப்பு விழாவில் பெருமிதம்
சென்னை: ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதுடன், நீதித்துறையிலும் ஏராளமான பெண்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மாநிலத்திற்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து இதுவரை ஐந்து நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர் என்று குறிப்பிட்டார். பின்னர், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ஏற்புரையாற்றியதாவது: புகழ்மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைகிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்பதரை மாத பதவிக்காலத்தில் அதிகளவில் கற்றுக் கொண்டுள்ளேன். தற்போது, முழு திருப்தியுடன் விடைபெறுகிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழக நீதித்துறையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதிகளில் 130 நீதிபதிகள் பெண்கள் உள்ளனர். இதற்கு தமிழ்நாடு மாநிலத்தை பாராட்டுகிறேன். கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற அடிப்படையிலேயே நானும் கற்றேன். நான் வழக்கறிஞராக வந்ததே விபத்து மாதிரிதான். எனது தந்தை என்னிடம் நீதிபதியாகிறாயா என்று கேட்டபோது, நான் வேண்டாம் என்று மறுத்தேன். ஆனால், அதே பதவிக்கு வந்து தலைமை நீதிபதியாகவும் வந்து இங்கு பணியாற்றியுள்ளேன்.
அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் பிரிவு உபசார விழாவில், தமிழ்நாடு பார்கவுன்சில் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றபோதும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.