தனது 50வது திருமண நாளையொட்டி பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர், இன்று தங்களது 50வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், 50வது திருமணநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன், பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். 50வது திருமணநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் - முத்தங்கள்" என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் கூறியதாவது;
அம்மாவும் - அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்!
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.
மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் - இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் - கடும் அரசியல் சூழல்கள் - தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா!
அம்மாவின் உணர்வுகள்- நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா!
பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு.
இப்போது, அப்பா கண்டிப்பவராகவும் - அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள்!
அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் - முத்தங்கள்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.