சென்னை பயிற்சி முகாமுக்கு வந்தபோது லாரி மீது கார் மோதலில் ஆசிரியை உள்பட 2 பேர் பலி: ரூ.3 லட்சம் நிவாரணம் அளித்து முதல்வர் உத்தரவு
விழுப்புரம்: சென்னையில் நேற்று நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ராம்பாக்கம் அரசு பள்ளி ஆசிரியை பூவிழி(31), விழுப்புரம் காரணை பெரிச்சானூர் அரசு பள்ளி ஆசிரியைகள் சிவரஞ்சினி(38), மெகருன்னிஷா(47), கவுசல்யா(23) ஆகியோர் பண்டசோழநல்லூரை சேர்ந்த சூர்யா என்பவரின் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களுடன் கணவர்கள் ஷாகுல்அமீது(52), முருகன், எல்லப்பன் உள்ளிட்டவர்களும் வந்தனர். காரை சூர்யா ஓட்டினார்.
விழுப்புரம் அடுத்த அய்யூர்அகரம் என்ற இடத்தில் சென்றபோது, ராங் ரூட்டில் சென்னை-திருச்சி மார்க்கமாக காரை ஓட்டியதில், சென்னையில் இருந்து திருச்சி டால்மியாபுரம் சிமென்ட் கம்பெனிக்கு வந்த லாரி மீது கார் மோதியது. இதில் ஆசிரியை மெகருன்னிஷாவின் கணவர் ஷாகுல்அமீது, ஆசிரியை சிவரஞ்சினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் சூர்யா, ஆசிரியைகள் உள்பட 6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.