சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரூ.49.49 கோடியில் 11 விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
சென்னை: 2025-26ம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.49.49 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு வளாகங்களை மேம்படுத்துதல், கூடுதல் விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள், பாரா விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட 11 விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ரூ.24.70 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் கொண்ட மாணவர் விளையாட்டு விடுதியுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கும் பணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தேசிய மற்றும் சர்வதேச தடகள விளையாட்டு வீரர்களுக்காக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான அரங்கமாக பயன்படுத்தும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கின் மைதானத்தில் ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய எறிதல் மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்காக நிழற்கூரையுடன், வெளியே கோணப்பட்ட மெஷ், அக்ரிலிக் தரையமைப்பு, ஒளியமைப்புகளுடன் கூடிய இரண்டு நிலையான கூடைப்பந்து மைதானங்கள் மற்றும் இரண்டு கையுந்துப்பந்து மைதானங்கள் அமைக்கவும் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சேப்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா நீச்சல் குளத்தை வடிகட்டி அமைப்புடன் முன்வயப்பட்ட கட்டமைப்பு முறையை பயன்படுத்தி ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்த அடிக்கல் நாட்டினார். சென்னை முகப்பேரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேசை பந்து விளையாட்டு வளாகத்தை ரூ.2.97 கோடி மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 1,300 சதுர அடி பரப்பளவில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் 100 மாணவர்களுக்கான தங்கும் வசதி, உணவறை மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளுடன் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் புதிய விளையாட்டு விடுதி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் உள்பட ரூ.49.49 கோடியில் 11 விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ க.கணபதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.