சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் இடிப்பு
சென்னை: கொரோனா லாக்டவுனுக்கு முன்பு வரை வடபழனியில் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் செயல்பட்டு வந்தது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாக திகழ்ந்த இந்த தியேட்டரில், ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட் விற்கப்பட்டது. தற்போது தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அதிகரித்துள்ளதாலும், பராமரிப்பு செலவுகள் உயர்ந்திருப்பதாலும், தனி தியேட்டர்கள் லாபகரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏவிஎம் குழுமத்தினர் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரை விற்க முடிவு செய்தனர்.
அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, தியேட்டர் முழுவதையும் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக சென்னை கே.கே நகர் உதயம் காம்ப்ளக்ஸ், தண்டையார்பேட்டை எம்.எம் தியேட்டர், பெரம்பூர் ஸ்ரீபிருந்தா தியேட்டர் இடிக்கப்பட்டன. தற்போது ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் இடிக்கப்படுகிறது.