சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: குருவி கைது
சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்கள் உடைமைகளையும், பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் துபாய்க்கு செல்வதற்கு வந்திருந்தார். அவருடைய உடைமைகளை ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவருடைய சூட்கேசுக்குள் ரகசிய அறை வைத்து, அதில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதனால், அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணியையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.52 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தையும், மேல் நடவடிக்கைக்காக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், பணம் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என தெரிய வந்தது. அதோடு இந்த பணத்தை வேறு யாரோ இவரிடம் துபாய் வழியாக, வெளிநாட்டிற்கு கடத்துவதற்கு கொடுத்து அனுப்பி உள்ளனர். எனவே இப்போது பிடிபட்டுள்ள பயணி, கடத்தல் குருவி தான். இவரிடம் இந்த ரூ.52 லட்சம் ஹவாலா பணத்தை கொடுத்து விட்டது வேறு யாரோ ஒரு நபர் என்று தெரிந்தது.
எனவே இவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பிய நபர் யார் என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூ.52 லட்சம் ஹவாலா பணம் வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து, சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.