சென்னையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை : காற்று மாசு அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று மாசு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியை மக்கள் கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பரிமாறி கோலாகலமாக தீபாவளியை கொண்டாடினர். தலைநகர் சென்னையிலும் நேற்று இரவு இடைவிடாது பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 80 ஆக இருந்த நிலையில், கிடு கிடுவென உயர்ந்ந்துள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 217 ஆகவும், மணலியில் மற்றும் வேளச்சேரியில் 151-ம், ஆலந்தூரில் 128-ம், அரும்பாக்கத்தில் 145 ஆகவும் காற்று மாசு பதிவாகியிருந்தது. காற்று மாசு அதிகரித்தாலும், இது கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டு மிக மோசமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மிதமான அளவில் பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் இடைஇடையே கனமழை பெய்ததே காற்று மாசு குறைவுக்கு முக்கிய காரணமாக தெரிகிறது.