சென்னை-அந்தமான் விமானம் புறப்பாடு 4 மணி நேரம் தாமதம்: பயணிகள் வாக்குவாதம்
சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தாமதமாக காலை 11 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். அந்தமான் செல்வதற்காக வந்த 158 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் காத்திருத்திருக்கின்றனர். அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால், விமானம் தாமதமாக புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு காலை 7:20 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டிருக்க வேண்டும். மற்ற விமானங்கள் அந்தமானில் தரையிறங்கும்போது, ஏர் இந்தியாவுக்கு மட்டும் என்ன பிரச்சனை என கேட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரிய ரக விமானம் என்பதால் பாதுகாப்பு கருதியே தாமதமாக இயக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.