சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை சுட்டுப் பிடித்தது காவல்துறை
சென்னை: சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விஜயகுமாரின் காலில் சுட்டு பிடித்துள்ளார். ரவுடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் காவலர் தமிழரசன் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, இந்திராணி நகர் ரயில் நிலையம் அருகே நவம்பர் 20 ஆம் தேதியன்று மவுலி என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கெளதம், நிரஞ்சன் ஆகிய இருவர் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ரவுடி விஜயகுமாரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ரவுடி விஜயகுமார் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகுமாரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, விஜயகுமார் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் ரவுடி விஜயகுமாரின் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி விஜயகுமார் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.