வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640க்கு விற்பனை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6ம் தேதி ஒரு சவரன் ரூ.75,000 மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது.
அதன்பின்பு கடந்த 21ம் தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.390ம், சவரனுக்கு ரூ.3,120ம் உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640க்கு விற்பனையாகிறது. இதே ஏறுமுகம் நீடித்தால் தங்கம் ஒரு பவுன் ரூ.78,000 விரைவில் தொட்டுவிடும். தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.136க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
27.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.75,120
28.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.75,240
29.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.76,280
30.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.76,960
31.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.76,960