சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு விலை உயர்வு; கையை சுட்டது டீ கிளாஸ்: வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று டீ, காபி விலை உயர்ந்தது. பஜ்ஜி, சமோசா போன்றவற்றின் விலையும் அதிகரித்தது. அதிகாலையில் கடைகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் விலை உயர்வை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி அருந்தும் பானமாக டீ, காபி இருந்து வருகிறது. பலருக்கும் இவற்றை குடித்தால்தான் வேலையே ஓடும் என்கிற வகையில் மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றன. டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற அளவுக்கு தான் நகர்ப்புறங்களில் வாழ்க்கை என்பது உள்ளது.
என்ன தான் வீட்டில் காபி, டீ போட்டாலும், கடைகளில் நண்பர்களுடன் அமர்ந்து ஜாலியாக பேசி டீ, காபி சாப்பிடுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் தெருவுக்கு, தெரு டீக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்கள், சாலையோரங்கள் அனைத்திலும் டீக்கடைகளாக தான் காட்சியளித்து வருகின்றது. சொல்ல போனால் இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு காலை, மாலை, இரவு என குறைந்தது 5 டீ, காபி அருந்தும் வழக்கத்தை வைத்துள்ளனர். அதுவும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் டென்சனை போக்க அடிக்கடி டீ அருந்துவதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பால், டீ-காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, சமையல் சிலிண்டர் உயர்வு போன்ற காரணங்களால் செப்டம்பர் 1ம் தேதி (நேற்று) முதல் டீ, காபி விலை உயர்த்தப்படும் என்று டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்து இருந்தது. இதற்கான அறிவிப்பும் கடைகளில் வாடிக்கையாளர்கள் பார்க்கும் அளவுக்கு ஓட்டியும் வைக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் நேற்று டீ, காபி விலை உயர்த்தப்பட்டது. அதாவது ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15லிருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி போன்றவை ரூ.15லிருந்து ரூ.20 ஆகவும், பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரூ.20லிருந்து ரூ.25 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ஆனால் கிளாஸ் பால் ரூ.15, லெமன் டீ ரூ.15 என்றும் பழைய விலையிலேயே விற்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதேபோல கப் டீ, பால் பார்சல் ரூ.45 ஆகவும், கப் காபி, ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி பார்சல் ரூ.60 ஆகவும், பூஸ்ட் ரூ.70, ஹார்லிக்ஸ் பார்சல் ரூ.70 என்றும் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக டீக்கடைகள் அதிகாலை 4 மணி முதல் திறக்கப்படும். நேற்று காலையில் வழக்கம் போல் டீ, காபி சாப்பிட வந்தவர்கள் விலை உயர்வை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிலர் காலம் காலமாக வந்து உங்களிடம் தான் சாப்பிடுகிறோம். இப்படி விலையை உயர்த்தினால் எப்படி என்று கேள்வியும் எழுப்பினர்.
சென்னையில் ஒரு சில டீக்கடைகளில் தான் இந்த விலை உயர்வை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர். ஆனால் சில கடைக்காரர்கள் விலை உயர்வை உடனடியாக அமல்படுத்தப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் படிப்படியாகவே விலையை உயர்த்துவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க, மற்ற பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் இழப்பை ஈடுசெய்ய முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் டீ கடைகளில் விற்கப்படும் பஜ்ஜி (வாழைக்காய், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு), சமோசா போன்றவை ஒரு பீஸ் ரூ.12க்கு விற்கப்பட்டது. இது நேற்று முதல் ரூ.3 வரை உயர்ந்து ஒரு பீஸ் ரூ.15க்கு விற்கப்பட்டது. டீ, காபி, பஜ்ஜி போன்றவற்றின் விலை உயர்வு அன்றாட செலவுகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.