சென்னையில் வரும், 7 முதல் 9ம் தேதி வரை ராணுவ தொழில் மாநாடு
சென்னை: சென்னையில் வரும், 7 முதல் 9ம் தேதி வரை, வான்வெளி மற்றும் ராணுவ தளவாட துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் மாநாடு நடைபெறவுள்ளது; இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்
தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில், வான்வெளி மற்றும் ராணுவ துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் வரும், 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை, 'ஏரோடிப்கான் 25' அதாவது, 'ஏரோஸ்பேஸ் அண்டு டிபென்ஸ் மீட்டிங்' என்ற மாநாட்டை நடத்துகிறது.
இதை நம் நாட்டின் ராணுவ அமைச்சகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.சி.ஐ., ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
குறிப்பாக வான்வெளி துறையில் முன்னணியில் உள்ள, 'ஏர்பஸ், போயிங், டசால்ட், சப்ரான்' ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தில் முதலீடு செய்யுமாறு, இந்த மாநாட்டில், நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுக்க உள்ளது.