தண்டவாளத்தில் தலை வைத்து சென்னை ஐடி ஊழியர் தற்கொலை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ளது குமடிபாளையம். இந்த ஊரை சேர்ந்த ராஜவேலு மகன் கவீன்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு தனது பெற்றோருக்கு போன் செய்த கவீன் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்படி சென்னையில் இருந்து பழனி எக்ஸ்பிரஸ் மூலம் அவர் இன்று அதிகாலை 3.45மணியளவில் மோகனூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை பெற்றோர் தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர்.
இந்தநிலையில் மோகனூர் ரயில் நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள தண்டவாளத்தில் இன்று காலை தலை துண்டான நிலையில் வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் சடலமாக மீட்கப்பட்டவர் ஐடி ஊழியர் கவீன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மோகனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய கவீன், அவர் வந்த ரயில் சென்ற பிறகு அந்த பகுதியில் மற்றொரு ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.