உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்து சவரன் ரூ.92,000க்கு விற்பனை: தாறுமாறாக எகிறிய வெள்ளி விலை!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நேரமும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த நிலையில், நேற்று காலை தான் அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
தொடர்ந்து மாலை வேளையிலே மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.187க்கும், ஒரு கிலோ ரூ.1,87,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.92,000 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாலையில் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி மாலையில் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.190க்கு விற்பனையாகி வருகிறது.