மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு ரூ.85 உயர்வு; ஒரு சவரன் ரூ.91,00க்கு விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நேரமும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த நிலையில், நேற்று காலை தான் அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
தொடர்ந்து மாலை வேளையிலே மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 11ம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.187க்கும், ஒரு கிலோ ரூ.1,87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.