செங்கல்பட்டில் காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம்: மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி வழங்கினார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 2ம் தேதி மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாள் என முப்பெரும் நிகழ்வை முன்னிட்டு, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவரும் வழக்கறிஞரும் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து காங்கிரசார் இருசக்கர வாகனங்களில் செங்கல்பட்டு நகரப் பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். மேலும், லால்பகதூர் சாஸ்திரி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெ.பாஸ்கர் ஏற்பாட்டில், 1000 பேருக்கு அறுசுவை உணவுகளுடன் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி அன்னதானம் வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மகளிரணி தலைவி வேல்விழி, மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மறைமலைநகர் காங்கிரஸ் தலைவர் தனசேகர், கூடுவாஞ்சேரி நகர தலைவர் கிருஷ்ணன், காட்டாங்கொளத்தூர் வட்டாரத் தலைவர் ஜானகிராமன், மதுராந்தகம் வட்டாரத் தலைவர் சத்தியசீலன், பிரியங்கா காந்தி பேரவை மாநில செயலாளர் நடராஜன், ஓபிசி அணி மாநில பொது செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.