கெமிக்கல் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்; சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
சென்னை: சென்னையில் பிரபல கெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வரிஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை தி.நகர் வடக்கு கிரசண்ட் சாலையில் ‘ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனம் இயங்கி வருகிறது. குஜராத்தை தலைமையிடமாக இந்த நிறுவனம் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுவனத்திற்கு வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளது. இந்த கெமிக்கல் நிறுவனம், மருந்து உற்பத்தி, உரம் உற்பத்தி மற்றும் கடல் நீரிலிருந்து பல்வேறு மூலப்பொருட்கள் பிரித்தெடுத்து கெமிக்கலை தயாரித்து வருகிறது. ரசாயனம் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை வருமான ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2023-24ம் நிதியாண்டில் தனது வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகம், எம்ஆர்சி நகரில் உள்ள அலுவலகம் மற்றும் துணை நிறுவனங்களான ஆழ்வார்பேட்டை மாணிக்கம் அவென்யூ பகுதியில் உள்ள அலுவலகம் உட்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து ரசாயனங்கள் இறக்குமதி செய்தது தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளின் நிறுவனத்தின் ரசாயனம் விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள், ஆண்டு வருமானம் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்றும் நீடிக்கும் என கூறப்படுகிறது. சோதனை முடிவில் தான் எத்தனை கோடி வரை ஒன்றிய அரசிடம் இருந்து வரி ஏய்ப்பு செய்தது தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.