தொடர் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; சென்னை விமான நிலையத்தில் சோதனைகளால் பயணிகள் அவதி: புறப்பாடு விமானங்களும் தாமதம்
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளிகள் காரணமாக, பலகட்ட சோதனைகள் துருவிதுருவி நடப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விமானங்களும் தாமதமாக செல்கின்றன. டெல்லி செங்கோட்டையில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதோடு சென்னை விமான நிலையத்திலும் அன்றைய தினத்தில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டதோடு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடக்கும் சோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதோடு பயணிகளின் ஷூக்கள், பெல்ட்கள், குளிருக்காக அணிந்து இருக்கும் ஜாக்கெட்கள் உள்ளிட்டவைகள் அனைத்தையும் கழற்றி, ஸ்கேன் மூலம் பரிசோதித்து பின்பு மீண்டும் எடுத்து அணிந்து கொண்டு செல்வதற்கு அனுமதிக்கின்றனர். அதேபோல் ஷூக்கள், பெல்ட்கள், ஜாக்கெட்டுகள் போன்றவைகளை கழற்றி பாதுகாப்பு சோதனைக்கு வைப்பதில் காலதாமதம் செய்வதால் பயணிகளுக்கு நடக்கும் பாதுகாப்பு சோதனைகளும் தாமதமாகின்றன. இவ்வாறு பல கட்ட சோதனைகளால், காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து வெளிநாடுகள் செல்லக்கூடிய பல விமானங்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
அதோடு பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகளும் பல கட்டங்களாக தொடர்ந்து நடந்ததால் பயணிகள் விமானங்களில் ஏறுவது தாமதமாகி சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் பிராங்க்பர்ட் நகருக்கு செல்லும் லூப்தான்ஷா ஏர்லைன்ஸ், துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தோகா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், தாய்லாந்து செல்லும் தாய் ஏர்லைன்ஸ், சார்ஜா செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ், அபுதாபி செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ், அபுதாபி செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ், மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விமானங்கள், சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
எனவே, இதுபோல் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் போதும் இந்த சோதனைகளை நடத்தும் பாதுகாப்பு படை அதிகாரிகளான மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை கூடுதலாக பணியில் அமர்த்துவதோடு, பாதுகாப்பு சோதனை பணிகளை விரைந்து நடத்துவதற்கான பயிற்சி பெற்ற வீரர்களையும் பணியில் அமர்த்த வேண்டும். அதோடு பெரும்பாலான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் மட்டுமே பேசுவதால் பாதுகாப்பு சோதனைகள் தாமதம் ஏற்படுகிறது. எனவே தமிழ் அல்லது ஆங்கிலம் பேசக்கூடிய வீரர்களை, இதேபோன்ற பாதுகாப்பு சோதனை பகுதிகளில் அதிகமாக நியமிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.