மரக்காணம் அருகே அசப்பூர் பகுதியில் ஓங்கூர் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்
*விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
மரக்காணம் : மரக்காணம் அருகே அசப்பூர் பகுதியில் உள்ள ஓங்கூர் ஆற்றில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள நகர், ராயநல்லூர், அசப்பூர், நல்லம்பாக்கம், காணிமேடு, மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர் ஆறு.
இந்த ஆற்றின் நீர்மட்ட உயர்வை நம்பி இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் தங்களது விளைநிலங்களில் நெல், தர்பூசணி, மணிலா, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை நடவு செய்கின்றனர்.
ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் இந்த ஓங்கூர் ஆற்றில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. ஆனால் மழை நின்றவுடன் அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆற்றில் செல்லும் வெள்ள நீரானது அருகில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வங்காள விரிகுடா கடலுக்கு வீணாக செல்கிறது. இதனால் இந்த ஆறு பல மாதங்கள் வறண்டே காணப்படும் நிலை உண்டாகிறது.
இந்த ஆற்றில் பல இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால் பருவமழை காலத்தில் வரும் வெள்ள நீரானது அந்த தடுப்பணைகள் உள்ள பகுதியில் தடுத்து நிறுத்தப்படும். இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரம்.
இதுபோல் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தால் அருகில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய்களிலும் அதிகப்படியான தண்ணீர் கிடைக்கும். இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் செழிப்பான விவசாயம் செய்வார்கள். இங்கு செழிப்பான விவசாயம் நடைபெற்றால் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படியாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 50 ஆண்டுக்கு முன் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அசப்பூர் கிராமத்துக்கும் அருகில் உள்ள புதுப்பட்டு கிராமத்துக்கும் இடையில் இந்த ஆற்றில் தடுப்பணை கட்டியுள்ளனர். ஆனால் இந்த அணையை முறையாக பராமரிப்பு செய்யாததால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடைந்து விட்டது.
இந்த சேதமடைந்த தடுப்பணையை மேற்கொண்டு பராமரிப்பு செய்யவில்லை. எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஓங்கூர் ஆற்றில் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆற்றின் குறுக்கே புதியதாக தடுப்பணை கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.