எஸ்எம்சி உறுப்பினர் வருகைப்பதிவில் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் மாற்றங்களை செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து 2024-26ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டமானது கடந்தாண்டு முதல் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டின் முதல் எஸ்எம்சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து சென்ற மாதத்துக்கான கூட்டம் ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட்டது.
இதில் பள்ளிகள், மாணவர்கள் வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையே எஸ்எம்சி உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. அதன்படி வருகைப் பதிவு செயலியில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்(Present), பங்கேற்கவில்லை(Absent) ஆகியவற்றுடன் கூடுதலாக காலியிடம் (Vacant) எனும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள தேவையில்லை.
ஒருவேளை அவர்கள் விரும்பினால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களின் வருகையை பதிவு செய்யவேண்டாம். அதற்குமாறாக செயலியில் அவர்களுக்கு காலியிடம் என குறிப்பிட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.