மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன என மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ம் தேதி துவங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. நேஷனல் சென்சஸ் எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் பற்றி எம்.பி.க்கள் சிலர் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்.
அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் ஜூன் 16ம் தேதியிட்ட அரசிதழ் வெளியீடு மூலம் 2027ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன. இது தொடர்பாக, கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் டெல்லியில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குனர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என அவர் பதில் அளித்திருந்தார்.