கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்; எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
பெரம்பூர்: வடசென்னை பகுதியில் கால்வாய் பணிகளை துணை முதல்வர் உதயநிதி இன்று ஆய்வு செய்தபோது,'' எவ்வளவு மழை வந்தாலும் அவற்றை சமாளிக்க தமிழக அரசு முழுவீச்சில் தயாராக உள்ளது' என்று தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு கால்வாய்களில் முன்னெச்சரிக்கை பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு45, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி வியாசர்பாடி கால்வாய் ஜீரோ பாயிண்ட், வார்டு 36 அழகேசன் தெரு டான் பாஸ்கோ பள்ளி அருகில் கேப்டன் காட்டன் கால்வாய் ஜீரோ பாயிண்ட், வார்டு 37 கொடுங்கையூர் குப்பை சேகரிக்கும் வளாகத்தின் பிரதான வாயில் பகுதியில் உள்ள கொடுங்கையூர் கால்வாய், வார்டு 41, மணலி சாலையில், லிங்க் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மேற்கண்ட பகுதிகளில் முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, கலாநிதி வீராசாமி எம்பி, ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்பட பலர் இருந்தனர்.முன்னதாக ஆய்வின்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;எவ்வளவு மழை வந்தாலும் தயார் நிலையில் தமிழக அரசு உள்ளது.
சமூகவலைதளங்களில் உள்ள புகார்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடசென்னையில் 5, 8 செ.மீ மழை பதிவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வடசென்னையில் முதலமைச்சர் உத்தரவின்படி ஆய்வு செய்கிறோம். வடசென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் 331 கிமீ தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உதயநிதி கூறினார்.