வணிக பகுதிகளில் கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த தடை விதிக்கணும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்
நெல்லை: நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று அளித்த பேட்டி: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வியாபாரிகளை பொறுத்தவரை சிறு தவறுக்கு ரூ.500க்கு அபராதம் விதிக்க வேண்டியதற்கு, அதிகாரிகள் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் என அபராதம் விதிக்கின்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில் வணிக நிறுவனங்களை தொடர்பு கொண்டு வணிகவரித்துறை அதிகாரிகள் பண்டிகைக்காக வந்து கவனியுங்கள் என நச்சரிக்கின்றனர்.
தமிழக முதலமைச்சரிடம் நேரடியாக இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயங்காது. அதிகாரிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக வரும் 9ம் தேதி அறிக்கையாக வெளியிட உள்ளோம். தீபாவளி பண்டிகை நேரத்தில் இரவிலும் பணி செய்யும் வியாபாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும். கரூரில் நடந்த சம்பவம் கவலைக்குரியதாகும்.
இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில் கூட்டங்கள், ரோடு ஷோ நடத்துவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து முதல்வரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். வியாபாரம் நடத்தும் பகுதிகளை மறைத்து பேனர்கள் வைப்பதை தடை செய்ய வேண்டும். வணிக நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. மூன்று வேளை உணவு, தங்குமிடம் குறைந்தபட்ச சம்பளமாக 15,000 வழங்க தயாராக இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.