புல்லட் பைக் ஓட்டிய வாலிபர்; அரசு பஸ் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலி!
பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் மருதபாண்டியன் (34). தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் இன்று மதியம் தனது புல்லட் பைக்கில் வீட்டில் இருந்து காரை சென்றார் வந்தார். மீண்டும் பைக்கில் அவர் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் காரை - தெரணி செல்லும் சாலையில் பாட்டப்பன் கோயில் அருகே செல்லும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கிவீசப்பட்ட மருதபாண்டியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருதபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருதபாண்டியன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு முன்பு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அரசு பேருந்து டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் எறையசமுத்திரத்தை சேர்ந்த அழகுதுரை மகன்
சந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.