கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பக்கிங்காம் கால்வாய் அகலப்படுத்த வேண்டும்
*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மயிலாடுதுறை: பக்கிங் கால்வாய் ஆழ் படுத்தி அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் இருந்து வேதாரண்யம் வரை பக்கிங்காம் கால்வாய் கடலோரப் பகுதிகளில் ஆறு போல் காட்சியளித்து சென்று வருகிறது. தற்பொழுது பராமரிப்பு இன்றி கால்வாயின் கரைகள் வலுவிழந்து ஆக்கிரமிக்கப்பட்டு கிடக்கிறது.பக்கிங்காம் கால்வாய் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.
1806-ல் சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு, பின்னர் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது. 1886-ல் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமைக்கு தீர்வாக ஆளுநர் பக்கிங்காம் என்பவரால் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தொடங்கி தமிழகத்தின் வேதாரண்யம் வரை நீர் வழிபோக்குவரத்துக்காக கால்வாய் வெட்டப்பட்டது.
இதனால் தான் இந்தக் கால்வாய்க்கு பக்கிங்காம் கால்வாய் என்று பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்த பக்கிங் கால்வாய் மூலம் வேதாரண்யத்தில் உப்பு எடுக்கப்பட்டு கால்வாயின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
பழங்கால வணிகர்களுக்கு நீர்வழி போக்குவரத்தாக பக்கிங் கால்வாய் திகழ்ந்து வந்தது.தற்பொழுது மீனவர்கள் பக்கிங் கால்வாயை தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மேலும் மீனவர் கிராமங்களில் மழை வெள்ள காலங்களில் மழைநீர் தேங்காத அளவில் வடிகால் வசதி ஏற்படுத்தும் வகையிலும் மேலும் கடலோர கிராமப் பகுதிகளின் நிலத்தடி நீரை பாதுகாப்பு வகையிலும் பக்கிங்காம் கால்வாய் தற்பொழுது திகழ்ந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்கிங் காம் கால்வாய் சின்ன கொட்டாய் மேடு ,பழையார், மடவாமேடு, கூழையார் ,திருமுல்லைவாசல் ,வானகிரி, கீழ மூவார்கரை, பூம்புகார், தரங்கம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு பக்கிங்காம் கால்வாய் இருக்கும் தடம் இல்லாத நிலை உருவாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து கடலோர கிராம மக்கள் கூறுகையில்,கடலோரப் பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கிங்காம் கால்வாய் கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கிய வெள்ள நீர்களை வெளியேற்றவும். கடற்கரையோர கிராமங்களில் வடிகால் வசதியாகவும் திகழ்ந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் சதுப்பு நில காடுகளில் அதிக அளவில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.அதற்கு வாழ்வாதாரமாகவும் இந்த கால்வாய் திகழ்ந்து வருகிறது.
பல வகையில் மீனவர்கள் மற்றும் உயிரினங்களுக்கு பாதுகாப்பாக திகழ்ந்துவரும் இந்த பக்கிங்காம் கால்வாயை பல வருடங்களாக தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அரசு பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வரும் நிலையில், கடலோர கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு பக்கிங் கால்வாயையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.