பாய்ஸ் கம்பெனி அருகே ஒய்யாரமாக உலா வந்த காட்டுமாடுகள்
குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால், அவ்வப்போது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று குன்னூர் பகுதியில் குன்னூர்-ஊட்டி சாலையில் காட்டுமாடுகள் வலம் வந்தது. இதனால், இவ்வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காட்டு மாட்டுகளை புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
இவ்வாறு சுற்றிதிரிந்த காட்டுமாடுகள் பாய்ஸ் கம்பெனி அருகேயுள்ள வணிக வளாகத்தை ஒட்டி சென்றது. இதனால் பொதுமக்கள் பலர் காட்டுமாடுகளை கண்டு பீதியடைந்தனர். மேலும், குன்னூர் அருகேயுள்ள ஜெயந்தி நகர், அம்பேத்கர் நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இதேப்போல் காட்டுமாடு சுற்றி திரிவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், இரவு நேரங்களில் பணிகளுக்கு சென்று வரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனவே, அப்பகுதியில் உணவு தேடி உலா வரும் காட்டு மாட்டுகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.