சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை பெண்ணுக்கு 54 ஆண்டு சிறை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா(40). அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயதான சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2021ம் ஆண்டு, போக்சோ சட்டத்தில் லலிதா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் விசாரித்து லலிதாவிற்கு ஒரு பிரிவுக்கு 20 ஆண்டும், மற்ற 4 பிரிவுகளின் கீழ் குறிப்பிட்ட ஆண்டுகள் என மொத்தம் 54 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18 ஆயிரம் அபராதமும் விதித்து ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்கும்படி நேற்று தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து லலிதா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.