எல்லையில் இருநாடுகளும் பயங்கர மோதல் பாக்.-ஆப்கன் குண்டுமழை 40 தலிபான்கள் பலி: 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானும், ஆப்கனும் 2,600 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துள்ளன. ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலிபான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மோதல் அதிகரித்து வருவதால் பாக்.கில் உள்ள ஆப்கன் மக்களை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இதன்பிறகு பாக். எல்லையில் தெஹ்ரீக் இ தலிபான் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான பாக். வீரர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் எல்லை தாண்டி காபூல் மீது பாக். ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை பாக். எல்லையில் ராணுவ முகாம்களை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 58 பாக். வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இருதரப்பிலும் நடந்த மோதலில் 200 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், அந்த மோதலில் 28 பாக்.ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்றும் இருதரப்பிலும் மோதல் வெடித்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பலுசிஸ்தான் மாகணத்தின் ஸ்பின் போல்டாக் பகுதியில் நான்கு இடங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் சுமார் 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. காந்தஹார் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தலிபான் படைகளின் 4வது பட்டாலியன் மற்றும் 6வது எல்லைப் படை பிரிவு முற்றிலுமாக அழிக்கப்பட்டன. அதே சமயம் பாகிஸ்தானில் 10 டாங்கிகள் தகர்க்கப்பட்டன. ஏராளமான பாக். வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் உருவானது. பதற்றத்தை தணிக்க பாக், ஆப்கன் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நேற்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.