டெல்லியில் நேற்று 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் இன்று 5 பள்ளிகளுக்கு மிரட்டல்..!!
டெல்லி: டெல்லியில் நேற்று 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் இன்று 5 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதே போல் நேற்றும் மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் விடுத்ததாக போலீசார் தகவல் தெரிவித்து இருந்தனர்.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பள்ளிகளில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வாரம் 3வது முறையாக இன்று டெல்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிரசாத் நகர் மற்றும் துவாரகா செக்டார் உள்ளிட்ட பகுதிகளில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.