அரசை குறை கூறுவதா?
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டனர். இதனால் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய கூட யாரும் இல்லாத நிலையில் மக்கள் நிர்கதியாகினர். இப்படியான ஒரு தருணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழக முதல்வரே நேரில் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.
ஒரு கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. அதே போல் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கும் சமமான பொறுப்பும், கடமையும் இருக்கிறது. ஆனால் தவெக கட்சி நிர்வாகிகள் மக்களை அம்போ என்று தவிக்கவிட்டு தலைமறைவு ஆகிவிட்டதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும். அரசும் அமைதியாக இருந்திருந்தால் அதையும் உள்நோக்கத்தோடு அரசியலாக்கி இருக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். கட்சி பாரபட்சமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் சொந்தங்கள் என்ற உணர்வோடு செயல்பட்ட தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அரசியல் அரைவேக்காடுகள் விமர்சனம் செய்வது ஏற்ககூடியதல்ல.
தங்கள் தரப்பில் நடந்துள்ள தவறுகளை கவனித்து அதை திருத்திக்கொள்ள முற்படாமல் நடந்த சம்பவத்தை அப்படியே ஆளும் கட்சி மீது திசை திருப்ப முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனமானது. உயிரிழப்பு சம்பவத்தை திசை திருப்ப சமூக வலைதளங்களில் புனைவு கதைகளை பலர் பரப்புகின்றனர். இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காலை முதல் இரவு வரை மக்களை காக்க வைத்து தாமதமாக களத்துக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய் செய்தது தான் உயிரிழப்புக்கு காரணமாகி உள்ளது. குறித்த நேரத்தில் கூட்டத்துக்கு வருகை தந்து தொண்டர்கள் பத்திரமாக வீடு சென்று சேர்ந்தார்களா என்பதை உறுதி செய்த மகத்தான தலைவர்கள் தமிழ்நாடு கண்டுள்ளது. இது போன்ற தலைவர்களின் பண்பை முன்னுதாரணமாக விஜய் கடைபிடித்திருக்க வேண்டும்.
ஆனால் விஜய் பகட்டு அரசியலுக்காகவும், மக்களை கவர்வதற்கும் மகத்தான தலைவர்களின் படத்தையும், பெயரையும் பயன்படுத்துகிறாரே தவிர அவர்களது கொள்கையை பின்பற்றுபவராக தெரியவில்லை. உங்களை காண வேண்டும் என்ற ஆசையில் மக்கள் வந்தார்களா? அல்லது தவெக நிர்வாகிகளால் அழைத்து வரப்பட்டார்களா?. அது எப்படியோ இருக்கட்டும். மக்கள் துயரத்தின் போது ஒரு கட்சி உறுதுணையாக நிற்க வேண்டுமே தவிர, சம்பவம் நடந்த பிறகு அரசு களத்தில் இறங்கி நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொண்ட பிறகு ஆற அமர நாங்களும் களத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்போம் என்று தவெக நிர்வாகிகள் கூறுவது நகைப்புக்குரியது.
கரூர் சம்பவத்தை பொறுத்த வரை தமிழக முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுத்து செயல்பட்டார். தமிழக அரசும் தனது பொறுப்பையும், கடமையையும் சிறப்பாக செய்துள்ளது. ஆனால் இதை அரசியல் கண்ணோட்டத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் குறைசொல்வதை நிறுத்தி இனியாவது விஜய் பொறுப்புடன் செயல்பட்டு தனது கட்சியையும், தொண்டர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மூத்த அரசியல்வாதிகளின் அறிவுரையாக இருக்கிறது.