சென்னையில் காரில் கஞ்சா கடத்திவந்த பாஜகவின் சிறுபான்மையின நல அணி தேசியசெயலாளர் இப்ராகிம் மகன் கைது: கஞ்சா, கார், செல்போன் பறிமுதல்
அண்ணாநகர்: காரில் கஞ்சா கடத்திய வழக்கில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்களை சிறையில் அடைக்க உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு கார், போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விரட்டி சென்று அந்த காரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து திருமங்கலம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம்(22), நண்பர் ரஷீத் (23)என்பது தெரியவந்தது. இதில், அப்துல் ரகீமின் தந்தை வேலூர் இப்ராகிம் என்பதும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் வந்த காரை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா பொட்டலங்கள் எடுத்து சென்றார்களா? கஞ்சா பழக்கம் உடையவர்களா? என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சா பொட்டலம், கார், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் வேலூர் இப்ராகிமின் மகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதனிடையே வேலூர் இப்ராகிம் மகன் உள்பட 2 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக தெரிகிறது.