ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்-தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘‘தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்ஐஆர் மூலம் வாக்குரிமை பறிப்பு, Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு, மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி, நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல் மற்றும் இந்தி திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.