பொருளாதார வளர்ச்சி, விஸ்வகுரு என்று பெருமை பேசும் ஒன்றிய பாஜ அரசு; ஏழைகளின் நலத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் கைவிரிப்பு: நாடாளுமன்ற நிலைக்குழுகளின் அறிக்கைகள் மூலம் அம்பலம்
புதுடெல்லி: பொருளாதார வளர்ச்சி, விஸ்வகுரு என பெருமைகளைப் பேசும் ஒன்றிய பாஜக அரசு, ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய நலத்திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் கைவிரித்திருப்பது நாடாளுமன்றக் குழு அறிக்கைகள் மூலம் அம்பலமாகியுள்ளது.‘நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது; மோடியின் தலைமையை உலகமே பாராட்டுகிறது. விஸ்வகுருவாக இந்தியா விளங்குகிறது’ என்று பெருமை பேசும் பாஜகவினரால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய நலத்திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது நாடாளுமன்றக் குழு அறிக்கைகள் மூலம் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை உரிமையாக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய திட்டமான ‘சமக்ர சிக்ஷா அபியான்’ நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடி வருகிறது. கடந்த 2020-21 மற்றும் 2023-24 நிதியாண்டுகளுக்கு இடையில், நாடு முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதிகளவில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த 2023-24ம் ஆண்டில், நாட்டில் உள்ள 10.15 லட்சம் அரசுப் பள்ளிகளில், 50,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை என்றும், 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறந்தவெளியில் இயங்கி வருவதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஊட்டச்சத்து திட்டமான ‘பிஎம்-போஷன்’ திட்டமும் போதுமான நிதியின்றி முடங்கியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 11 கோடி குழந்தைகள் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு சுமார் ரூ.10,000 கோடியாகவே உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும் இத்திட்டத்தை 12ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதேபோல், 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் ‘சக்ஷம் அங்கன்வாடி’ திட்டத்திற்கும் பெரும் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. 2025-26ம் நிதியாண்டுக்கு ரூ.38,403 கோடி தேவை என மதிப்பிடப்பட்ட நிலையில், வெறும் ரூ.21,960 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 1.57 லட்சம் அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதியும், 3.94 லட்சம் மையங்களில் கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலைவாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டமும் நிதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 13.5 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். ஆனால், கடந்த 2023-24ம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து, 2025-26ம் ஆண்டு வரையிலான நிதி ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாகவே மாற்றமின்றி உள்ளது. கிராமப்புறங்களில் வேலைக்கான தேவை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, ஒன்றிய நிதி அமைச்சகத்திடம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பெற ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் தேசிய சமூக உதவித் திட்டத்தின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3.09 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு ரூ.9,652 கோடியாகவே நீடிக்கிறது. 2022-23ம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்கான நிதியை அதிகரிக்காததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. பயனாளிகளுக்குப் போதுமான நிதி உதவியை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நிதி ஒதுக்கீட்டை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நிலைக்குழு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் நாடு முன்னேறுவதாகக் கூறப்பட்டாலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மிக முக்கிய நலத்திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படாதது, ஒன்றிய அரசின் முன்னுரிமைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அறிக்கைகளே, இந்தத் திட்டங்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன. இந்த நிதிப் பற்றாக்குறை கோடிக்கணக்கான ஏழை மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக நிபுணர்கள், அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.