50 ஆண்டுகள் ஆட்சி என்பது வாக்கு திருட்டு திட்டம்; அமித் ஷாவின் ரகசியத்தை அம்பலப்படுத்திய ராகுல்: பாஜக - தேர்தல் ஆணையம் மீது சரமாரி புகார்
பாட்னா: பாஜகவின் 50 ஆண்டு கால ஆட்சி ரகசியம் இப்போது வெளியே வந்துள்ளதாகவும், அது வாக்குத் திருட்டின் மூலமே நடப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாம் 5 முதல் 10 ஆண்டுகள் ஆள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை; குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அடுத்த 40-50 ஆண்டுகளில் அதிகாரத்தின் மூலம் நாட்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன் நாம் முன்னேற வேண்டும்’ என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கூற்றை மையமாக வைத்தே, மக்களவை எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது பாஜக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பீகாரின் மதுபானியில் ேநற்று ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில் பேசிய ராகுல் காந்தி, ‘ஒன்றிய பாஜக அரசு 40 முதல் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமித் ஷா பலமுறை கூறியுள்ளார். எப்படி அவரால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று நான் யோசித்தேன். அந்த விசித்திரமான கருத்தின் உண்மை இப்போது வெளிய வந்துள்ளது. அவர்கள் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபடுகிறார்கள். குஜராத்தில் தொடங்கி, 2014ல் தேசிய அளவிலும், பின்னர் மற்ற மாநிலங்களிலும் பரவியது. நான் பொய் சொல்வதில்லை; உண்மைகளும் ஆதாரங்களும் உள்ளன’ என்றார். இந்தக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாகப் பேசிய பிரியங்கா காந்தி, ‘மக்களவைத் தேர்தலின் போது ‘காங்கிரஸ் உங்கள் சொத்துகளைத் திருடிவிடும்’ என்றார் மோடி. ஆனால், மோடியே உங்கள் வாக்குகளைத் திருடுகிறார்’ என்று பேசினார்.
காங்கிரஸ் கட்சி சமீப வாரங்களாக ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் வன்மையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆவண ஆதாரங்களுடன் சத்தியப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்திக்குக் கெடு விதித்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முறை வெளிப்படையானது என்றும், அதன் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.