பாஜக அடைந்த வெற்றி என்பது திருட்டுத்தனமானது என ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு: முரசொலி விமர்சனம்
சென்னை: முரசொலி வெளியிட்ட தலையங்கத்தில்; கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றி என்பது 'திருட்டுத்தனமானது' என்று பகிரங்கமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் மக்களாட்சி மரபை குழிதோண்டிப் புதைக்கும் செயல்களுக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கும் சந்தேகத்தை இது எழுப்புகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க. தனது வெற்றிகளை அடைந்து வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
"போலி வாக்காளர்களைப் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் வாக்குப்பதிவை உயர்த்துதல், பா.ஜ.க. வெற்றிபெற வேண்டிய பகுதிகளில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், அதன்பிறகு அதற்கான ஆதாரங்களை மறைத்தல் போன்றவற்றை 'மேட்ச் பிக்சிங்' மாதிரி செய்கிறது பா.ஜ.க.” என்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலை முன் வைத்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் ராகுல் காந்தி. இதனை ஆதாரப்பூர்வமாக இன்னமும் தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை. இப்போது 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே முறைகேடுகள் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்களைத் தனது கட்சி விரைவில் வெளியிடும் என்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பேசியபோது ராகுல் காந்தி தெரிவித்தார். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு குறுகிய பெரும்பான்மையைப் பெற்றுத்தரும் நோக்கத்துடன், மோசடி செய்யப்பட்டதாக அவர் சாடியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, வாக்காளர் பட்டியலில் பேரளவில் மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்தார் ராகுல் காந்தி.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாட்டில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் முறையைப் பற்றி நான் சமீப காலமாகப் பேசி வருகிறேன். 2014 முதலே தேர்தல் முறையில் ஏதோ தவறு இருப்பதாக எனக்குச் சந்தேகம் இருந்து வந்தது. குஜராத் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதில் எனக்கு சந்தேகம் இருந்தது. நாங்கள் இதைப் பற்றி பேசும்போதெல்லாம் மக்கள் ஆதாரங்கள் எங்கே என்று கேட்டார்கள்? பின்னர் மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், 4 மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நாங்கள் படுதோல்வி அடைந்தோம். 3 வலிமையான கட்சிகள் திடீரென மறைந்துவிட்டன.
தேர்தல் முறைகேடுகளைப் பற்றித் தீவிரமாக ஆராய்ந்தோம். மகாராஷ்டிரத்தில் அதனைக் கண்டுபிடித்தோம். மக்களவைத் தேர்தலுக்கும் பேரவைத் தேர்தலுக்கும் இடையே ஒரு கோடி புதிய வாக்காளர்கள் தோன்றினார்கள். அந்த வாக்குகளில் பெரும் பகுதி பா.ஜ.க.வுக்குச் சென்றது. தற்போது எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன், எங்களிடம் ஆதாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். சில நாள்களில் மக்களவைத் தேர்தலை பா.ஜ.க. மோசடி செய்து வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம்.
கர்நாடகா மாநிலத்தில் ஒரு தொகுதியில் 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள். உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் மோடி. 15 இடங்களில் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இப்போது இருந்திருக்க மாட்டார் என்று பேசி இருக்கிறார் ராகுல் காந்தி. அவரது குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. சாமானியர் சொன்ன குற்றச்சாட்டுகளும் அல்ல.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் முதல் தனது மோசடிகளை பா.ஜ.க. செய்தது. அதே போல் தேர்தல் தொடர்பான சட்டங்களையும் திருத்தியது. அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்குமே அதிக வித்தியாசம் சில தொகுதிகளில் இருந்தது. எனவே சி.சி.டி.வி. காட்சிகளைத் தருமாறு பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மஹமூத் பிரச்சா என்பவர் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, 'காகித ஆவணங்களை மட்டும் தான் தர முடியும், சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையோ, காட்சிகளையோ தர முடியாது' என்று தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டு வந்து விட்டார்கள்.
வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)இல் ஆபத்தான திருத்தங்களைச் செய்தார்கள். இவை போன்ற மோசடிகளால் தான் பா.ஜ.க. வெற்றி பெற்று வருகிறது. 2024 தேர்தல் மூலமாக மீண்டும் ஆட்சிக்கு வர தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. பல்வேறு சதி, மோசடிச் செயல்களைச் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியப் பொது வெளியில் பரவி விட்டது. இதற்குத் தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும். பொத்தாம் பொதுவாக அல்ல; தொகுதி வாரியாக பதில் அளிக்க வேண்டும். வாக்காளர் சேர்க்கை முதல் நீக்கம் வரை ஒவ்வொரு தொகுதியாக பதில் அளிக்க வேண்டும். தேர்தலின் போது பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை பல மணி நேரம் நிறுத்தி வைத்துவிட்டு, திடீரென்று அறிவித்தார்கள். இந்த மர்மங்களுக்கு எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும் என்று முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.