தகாத உறவுக்காக மகன், மகளை கொன்ற அபிராமி : சாகும்வரை சிறை தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு!!
சென்னை : காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் விதித்த சாகும் வரை ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி அபிராமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவர், அபிராமி (25) என்ற மனைவி, அஜய் (7) என்ற மகன், கார்னிகா (4) என்ற மகளுடன் வசித்து வந்தார். அபிராமிக்கும், அருகாமையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பணி செய்து வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் முறை தவறிய உறவாக மாறியது. இருவரின் விவாகரம் வெளியில் தெரியவர, அவர்களை வீட்டில் கண்டித்தனர்.இதனைத் தொடர்ந்து அபிராமியின் கணவரையும், இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேற அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் கடந்த 2018-ம் ஆண்டு முடிவு செய்தனர்.
இவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பதுபோல் காட்டுவதற்கான விஜய் மற்றும் குழந்தைகள் அஜய், கார்ணிகா ஆகியோருக்கு உணவில் தூக்க மாத்திரகளை அதிகமாக கலந்து அபிராமி கொடுத்துள்ளார். இதில் குழந்தை கார்ணிகா மட்டுமே இறந்தார். மறுநாள் காலையில் விஜய் வேலைக்குச் சென்றுவிட்டார். மயக்க நிலையில் இருந்து குழந்தை அஜய்யை கழுத்தை நெறித்து கொன்றார்.இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல். குற்றம்சாட்டப்பட்ட அபிராமி, மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அபிராமி மேல்முறையீட்டு மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.