ஆரல்வாய்மொழியில் பைக் -கார் நேருக்கு நேர் மோதல் சமையல் தொழிலாளி பரிதாப சாவு
ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழியில் கார்- பைக் நேருக்கு நேர் மோதியதில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் தாணப்பன்(27). சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை தாணப்பன் இருச்சக்கர வாகனத்தில் ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் முத்துநகர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி இந்திரா கூட்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த குமார் என்பவர் காரில் வேகமாக வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக காரும் தாணப்பன் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.இதில் பைக் நொறுங்கியது. தாணப்பன் தூக்கி வீசப்பட்டார். தலை, உடல் ஆகிய பகுதிகளில் தாணப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தாணப்பன், காரை ஓட்டி வந்த குமார் ஆகிய 2 பேரையும் மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாணப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.