ஒரே வீட்டில் 240 பேருக்கு ஓட்டு பீகார் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் 2வது நாளாக வாதம்
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அமர்வில் இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வாதாடுகையில், \”எந்த ஆய்வும் செய்யாமல் முன்னறிவிப்பு இல்லாமல் பீகார் மாநிலத்தில் மட்டும் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேப்போன்ற நிலை பிற மாநிலங்களுக்கும் ஏற்படும் என்ற சூழல் இதன் மூலம் எழுந்துள்ளது. தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பாக எந்த வாக்காளர்களையும் தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து நீக்க கூடாது என்ற விதிமுறை இருந்தும், அதனை மீறி 65 லட்சம் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே பீகார் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களில் ஒன்றை கூட பலரால் தாக்கல் செய்ய முடியவில்லை. பல லட்சம் படிவங்கள் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் மொத்தமாக தயாரித்து கையெழுத்தில்லாமல் பதிவேற்றம் செய்தனர். பீகாரில் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 240 பேர் ஒரே முகவரியில், ஒரே வீட்டில் உள்ளதாக இருக்கிறது இது எப்படி சாத்தியம் ஆகும். மொத்தமாக வாக்காளர்களை நீக்கும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள யார் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி தந்தார்கள்.
மேலும், தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கக்கூடிய ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட், ஆனால் 36 லட்சம் பேர் மட்டுமே பீகார் மாநிலத்தில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். வசிப்பிட சான்றிதழ் பீகாரில் நடைமுறை இல்லை. பிறப்பு சான்றிதழ் என்பது கடந்த 2001ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4 கோடி அளவிற்கே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் எத்தனை பேர் தகுதியான வாக்காளர்கள் என்று அடையாளம் காணப்படுவார்கள் எத்தனை பேர் தகுதி பெறுவார்கள் என்பதை நினைத்தால் மிகப்பெரிய கேள்வியாக எழுகிறது.
மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதேபோன்று 7.24 கோடி வாக்காளர்களின் அந்த பட்டியலை எளிதாக தெரிந்து கொள்ளும்படி டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மீண்டும் அவர்களின் வாக்குரிமை கிடைக்கப்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகவும் பிரம்மிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக 240 பேர் ஒரே முகவரியில், ஒரே வீட்டில் உள்ளனர் என்பது சாத்தியமற்றது. இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளது’’ என்று தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.