"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
டெல்லி : பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 69 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர், புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "இறுதி வாக்காளர்கள் பட்டியலில் சுமார் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்றும், சம்பந்தபட்ட நபர்களுக்கும் தெரிவிக்கவில்லை.வாக்காளர் பட்டியல் வெளிப்படையானதாக இல்லை; பல்வேறு குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளது.முதலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என தெரிவிக்கவில்லை. 2003 தேர்தல் ஆணைய விதிமுறைகளை தேர்தல் ஆணையமே மீறி வருகிறது," என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "நீக்கப்பட்டவர்கள் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 69 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர், புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும், வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம்.தேர்தல் என்பது பொதுவான ஜனநாயக நடவடிக்கை, அதில் குழப்பம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்," இவ்வாறு தெரிவித்தனர்.