யார் பெரிய ஆளு என்ற போட்டியில் சொந்தக்கட்சிக்காரங்களையே பணம் கொடுத்து வாங்குவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மலராத கட்சியில் புது தலைவர் வந்த பிறகும்கூட மாஜி தலைவரின் விசுவாசியால் கோஷ்டி பூசல் உச்சகட்டத்துல இருக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கட்சிக்கு புது மாநில தலைவர் நியமனம் செய்து பல மாதங்களாகியும், இன்னும் பனியன் மாவட்டதுல மாஜி தலைவர் தான் ஆதிக்கம் செலுத்திட்டு வருகிறாராம்.. இதனால் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பம் நடந்துகிட்டு இருக்குதாம்.. மலராத கட்சியின் விவசாய அணியோட மாநில தலைவராக ஸ்னேக் கோப்ரா என்பவர் செயல்பட்டு வருகிறாராம்.. இவர் மாஜி மாநில தலைவரின் தீவிர விசுவாசியாம்.. அதோடு புதிய தலைவரை கொஞ்சம் கூட மதிக்கிறது இல்லையாம்.. இந்த சூழலில் இவரது அணிக்கு கீழ் மாவட்டம் வாரியாக மாவட்ட தலைவர்களை நியமனம் செய்துட்டு வருகிறார்.. இந்த நிலையில் பனியன் மாவட்ட விவசாய அணிக்கு இவர் ஒரு நிர்வாகியை நியமனம் செய்துள்ளாராம்.. அந்த நிர்வாகி தன்னுடைய லெட்டர் பேடில் தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ஸ்னேக் கோப்ராவின் எதிர்கோஷ்டியான கட்சியின் மாவட்ட பெண் தலைவர் பொங்கி எழுந்துட்டாராம்.. நான் கட்சியின் மாவட்ட தலைவர், என்னுடைய ஒப்புதல் இல்லாம எப்படி நிர்வாகிகளை நியமிக்கலாம்னு பொங்கி எழுந்திருக்கிறார்.. அதோடு நிறுத்தாம தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை ஏற்கனவே நியமனம் செய்த அதே விவசாய அணிக்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்தாராம்.. ஒரே பதவியில் இரண்டு பேரும் லெட்டர் பேடு அடிச்சு சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்காங்க.. இதுல யாரு தான் உண்மையான விவசாய அணி மாவட்ட தலைவர்ன்னு தெரியாம பனியன் மாவட்ட மலராத கட்சிக்காரங்க குழப்பத்துல இருக்காங்களாம்.. இந்த கோஷ்டி பூசல் பின்னணியில் மாஜி தலைவர் தலையீடு இருக்கிறதா சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரத்தக் கையெழுத்துக்கு விரட்டி விரட்டி பிடிக்கும் மாஜி அமைச்சரின் கண்ணில் படாமல் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் தலைமறைவாக திரிகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியின் மாஜியான உதயமானவர், சேலத்துக்காரரை வளைத்துப்போட வகை வகையாக யோசிக்கிறாராம்.. பொழுது விடிந்ததும் ஆளும்கட்சியில் இல்லாத குறையை எல்லாம் அள்ளிவந்து அறிக்கையும், வீடியோ பதிவுமென அன்றாடம் வெளியிடுகிறாராம்.. இது எடுபடாது போக, அன்னதானம், ஆர்ப்பாட்டம், மறியல் எனவும் தேடித்தேடி நடத்தியும் தேறாத நிலையில், குருபூஜைக்கு வரும் சேலத்துக்காரரை வரவேற்கிறோமென ரத்தக் கையெழுத்து என்ற பெயரில், அத்தனை பேரையும் விரட்டிப்பிடித்து இழுத்து வந்து விரலை ஊசியால் குத்தியெடுத்து ரத்தத்தில் ரேகையை பதிக்கச் செய்துக்கிட்டிருக்கிறார்.. சமூக, கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் விருப்பத்தோடு வந்து போகிற ஒரு விழாவிற்கு, சம்பந்தா சம்பந்தமின்றி தொண்டரின் ரத்தத்தையே குத்தியெடுத்து வரவேற்கும் இந்த ஐடியாவெல்லாம் மொத்தமும் அபத்தமில்லையா என கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமே எதிர்ப்பு கிளம்பி, பலரும் ரத்த ரேகையிட மறுத்தும், சிலர் இவரை விட்டு மறைந்தும் திரிகிறார்களாம்.. இத்தோடு, குருபூஜைக்கு வரும் சேலத்துக்காரரை வரவேற்கும் வாசகங்களோடு பேரவை சார்பில் அச்சிட்டு வாங்கி வைத்திருந்த டிராக் சூட்டுடன், பனியனையும் அத்தனை பேரையும் அணியச் செய்து, திடீரென மதுரை கலெக்டர் அலுவலகம் வரச் செய்திருக்கிறாராம்.. ஏதும் நடைபயிற்சி தருவார் போல என்றெண்ணி வந்தவர்களை திரட்டி கலெக்டரை பார்த்து 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீரை திறங்கள் என்று ஒரு மனுவை உதயமானவர் கொடுத்து, போட்டோ எடுத்துட்டு போயிருக்கிறார். கட்சி வளர்க்கும் உருப்படியான காரியங்களையெல்லாம் விட்டு விட்டு, அடுத்தடுத்த களேபரங்களால் விளம்பர அரசியலையே நடத்தி வரும் உதயமானவரின் செயல்கள் இலைக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு கவலையை ஒருபக்கம் கொடுத்தாலும் கடுப்பேற்றவும் செய்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குறைந்த வாக்காளர்களை கொண்ட யூனியனில் இப்போதே இத்தனை அணிகள் வரிந்து கட்டுவது மக்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
குட்டி பிரான்ஸ் எனப்படும் யூனியனில் கடந்த பொதுத்தேர்தலில் இருமுனை போட்டி மட்டுமே. இதனால் சீட் கிடைக்காத சீனியர்கள் சுயேச்சையாக நிற்க சிலருக்கு கிரீடமும் கிடைத்ததாம்.. ஆனால் வரும் தேர்தலோ புதுமையாக இருக்கும் வகையில் தற்போதைய களம் உள்ளதாம்.. மலராத கட்சி அதிருப்திகள் லாட்டரி அதிபரிடம் கைகோர்த்து தனி அணியாக செயல்பட, அதற்கு பி-டீம் என்ற விமர்சனம் கிடைத்துள்ளதாம்.. குழந்தைகளின் மாமா பெயர் கொண்ட சிட்டிங் பிரதிநிதியானவர் பல கட்சி அதிருப்திகளை ஒன்றிணைந்து நேத்து புதுக்கட்சி தொடங்கி உள்ளாராம்.. மேலும் கில்லாடியான மல்லாடியோ கடலோர மீனவ தொகுதிகளை குறிவைத்து தனி வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறாராம்.. இன்னும் சிலரோ சுயேச்சையாக ஆசைப்படுகிறார்களாம்.. 10 லட்சம் வாக்காளர்களை மட்டுமே கொண்ட சிறிய யூனியனில் இப்போதே இத்தனை அணிகளா... கண்ணைக் கட்டுதே... என்றே முணுமுணுப்பை ஆங்காங்கே கேட்க முடிகிறதாம்.. ஒருதொகுதியில் 5 பேர் நின்றால் 6,000 வாக்குகள் பெற்று பிரதிநிதியாகி விடலாம் என்பதால் சிலர் இப்போதே ஸ்கெட்ச் போட்டு வாக்காளர்களை கவனித்து வருகிறார்களாம்.. இதில் லாட்டரி குரூப் முதலிடத்தில் உள்ளதாம்.. இதுபற்றிதான் யூனியன் முழுக்க பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொந்த கட்சிக்குள்ளேயே யார் பெரிய ஆளு என்பதில் நிர்வாகிகளை விலைக்கு வாங்கும் அளவுக்கு போயிட்டாராமே இலைக்கட்சி மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர்களுக்கு இடையே பனிப்போர் உச்சகட்டத்தை எட்டி வருகிறதாம்.. தேர்தலுக்கு முன்பே, தனது பலத்தை காட்ட வேண்டும் என மாஜி அமைச்சர் மணியானவர் தீவிரமாக இருக்காராம்.. இதனால் மற்றொரு மாஜி அமைச்சர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து உள்ளாராம்.. முதற்கட்டமாக மணியானவர், மற்றொரு மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு ‘விட்டமின் ப’ கொடுத்து, அவர்களை தன் பக்கம் இழுத்து இருக்காராம்.. இதை கேள்விபட்டு அதிர்ந்து போன மற்றொரு மாஜி அமைச்சர், இதுகுறித்து தலைமையிடம் புகார் தெரிவிக்க முடிவு எடுத்து இருக்காராம்.. மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுப்பதை கேள்விப்பட்டிருக்கோம்.. சொந்த கட்சிக்குள்ளேயே நிர்வாகிகளை விலைக்கு வாங்கும் நிலைக்கு மாஜி அமைச்சர் மணியானவர் தள்ளப்பட்டு இருப்பதுபற்றிதான் அந்த கட்சிக்குள்ள அரசல்புரசாக பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.