பெசன்ட்நகர் கடலில் கோர சம்பவம் ராட்சத அலையில் சிக்கிய 3 மாணவர்கள்: ஒருவர் பலி, ஒருவர் மாயம், மற்றொருவர் கவலைக்கிடம்
சென்னை: பெசன்ட்நகர் கடலில் குளித்த மூன்று கல்லூரி மாணவர்களை ராட்சத அலை இழுத்துச் சென்றதில், ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் மாயமானார், மற்றொருவர் உயிருக்குப் போராடி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவி பிரகாஷ் (21), கேரளாவைச் சேர்ந்த முகமது ஆதில் (21), உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹித் சந்திரா (21) ஆகிய மூவரும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் எம்.ஏ. முதலாமாண்டு படித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில், இவர்கள் உட்பட 14 மாணவர்கள் கொண்ட குழுவினர் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, கவி பிரகாஷ், ரோஹித் சந்திரா, முகமது ஆதில் ஆகிய மூவரும் மட்டும் ஆளுநர் மாளிகை விருந்தினர் இல்லம் அருகே கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை, மூன்று பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், உதவி கேட்டுக் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள் சிலர், உடனடியாகக் கடலில் குதித்து கவி பிரகாஷ், முகமது ஆதில் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், கரைக்குக் கொண்டு வந்த சிறிது நேரத்திலேயே கவி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மயக்க நிலையில் இருந்த முகமது ஆதில், உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், கவி பிரகாஷின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடலில் மாயமான மாணவர் ரோஹித் சந்திராவைத் திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.