கடந்த மாதம் கிலோ ரூ.8... இந்த மாதம் ரூ.18; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருமடங்கானது பீட்ரூட் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.8க்கு விற்ற பீட்ரூட் இந்த மாதம் ரூ.18க்கு விலை போவதாக, சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டையில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. ஓணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் ரூ.பல கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடைபெறும்.
ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெரியப்பூர், வடகாடு, வண்டிப்பாதை, பெத்தேல்புரம், அத்திக்கோம்பை, ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, பெரியகோட்டை, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, 16-புதூர், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கொத்தயம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பீட்ரூட் பயிரிட்டுள்ளனர். இவைகள் வளர்ந்து தற்போது அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.
அறுவடை செய்யும் பீட்ரூட்டை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் இதே நாளில் ரூ.8க்கு கொள்முதல் செய்யப்பட்ட பீட்ரூட் தற்போது ரூ.18க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், பீட்ரூட் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.