குன்னூர் அருகே கதவை உடைத்து பள்ளியில் புகுந்த கரடி
*பீரோவை தள்ளிவிட்டு அட்டகாசம்
குன்னூர் : குன்னூர் அருகே பள்ளி கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நான்சச் குடியிருப்பு பகுதியில் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது. வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்கு கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நுழைந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி கதவை உடைத்து ஒரு கரடி உள்ளே நுழைந்தது. பின்னர் பள்ளியின் அலுவலக அறையில் உள்ள பீரோவை தள்ளிவிட்ட கரடி, பீரோவில் அடுக்கி வைத்திருந்த புத்தக பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
கரடி, பள்ளியில் புகுந்தது நேற்று காலையில் பொதுமக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டு, தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் தங்கள் பகுதியில் அதிகரித்துள்ளதாகவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடி அச்சத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.