வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று மாறிய நிலையில் இன்று அது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இது ஆந்திராவின் வடக்குப் பகுதியை நாளை கடந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இருகாற்றின் இணைவு ஏற்பட்டு மும்பை பகுதிக்கு சென்று 28ம் தேதி கடும் மழையை கொடுக்கும். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கன்னியாகுமரி வழியாக காற்று பயணித்த காரணத்தால் திருவட்டாறு பகுதியில் 182 மிமீ கொட்டித் தீர்த்துள்ளது, சுரளக்கோடு 160மிமீ, சித்தாறு 150மிமீ, அடையாமடை 142 மிமீ குழித்துறை 140 மிமீ, பேச்சிப்பாறை 128 மிமீ, பெரு்ஞ்சாணி 150மிமீ, உள்பட 14 இடங்களில் மிககனமழை பெய்துள்ளது. கடலூரிலும் மிக கனமழை பெய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி கன்னியாகுமரி, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டாவில் ஓரிரு இடங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும். நாளை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் லேசான மழை பெய்யும். பாலக்காட்டு கணவாய் பகுதியில் காற்று திசை மாறும் போது லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி பகுதிகளில் காற்று அதிகரித்து காணப்படும். சென்னை, புதுச்சேரி இடைப்பட்ட பகுதிகளிலும் மழை பெய்யும். கர்நாடக, ஆந்திர எல்லையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும். 29ம் தேதி முதல் மழை குறையத் தொடங்கும். அக்டோபர் 3ம் தேதிக்கு பிறகு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும்.
இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்த ‘ரகாசா’ புயல் மேற்கு நோக்கி பயணித்து வடக்கு வங்கக் கடல் பகுதியில் அக்டோபர் 3ம் தேதி மேற்கு நோக்கி நகரும் போது கடலோரப் பகுதியில் மழை பெய்யும். 8ம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு காற்று சுழற்சி உருவாகி தெற்கு ஆந்திரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். அந்த மழை, வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் வரையில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தொடர்ந்து காற்று சுழற்சிகள் உருவாகி வட கிழக்கு பருவமழை தொடக்கமே மழையுடன் இருக்கும்.